கிறிஸ்து வாழ்கிறார்

  Oct 19th, 2019, 751 Readers


Fr. Titus Mohan

இளைஞர்களுக்கான திருத்தந்தையின் திருத்தூது அறிவுரை மடல்


கிறிஸ்து வாழ்கிறார் (CHRISTUS VIVIT)

இளையோர் என்றாலே தலைவலி, குழப்பவாதிகள், தொந்தரவுகள், மூர்க்கத்தனம் கொண்டவர்கள், கோபக்காரர்கள், அடங்காப் பிடாரிகள், பெற்றோர் பெரியோரை மதிக்காதவர்கள், உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், சோம்பேறிகள், எல்லா கெட்ட பழக்கங்களையும் கைவசம் கொண்டவர்கள் என்றெல்லாம்; விசாரணையின்றியே எதிர்மறை கருத்துகளால் தீர்ப்புகளை வழங்குவோர் இன்றளவும் குறைந்தபாடில்லை. இங்ஙனம் இளையோரைப் பற்றிய பார்வையில் எப்பொழுதும் எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்கள் மத்தியில் நம் திருத்தந்தை பிரான்சிஸ் மிகவே வித்தியாசமானவர்.

என்றும் இளமையாய் இருக்கின்ற திருஅவைக்கு இளையோர்கள் தேவை என்பதை உரக்க முழங்குகின்றார். “உலகின் அனைத்து இளையோரிலும் நான் எப்போதும் எனது நம்பிக்கையை வைத்துள்ளேன். இப்பூமியெங்கும் புதுவசந்தம் பரவ இளையோர் வழியாக கிறிஸ்து ஏற்பாடு செய்கிறார்” என்று அடிக்கடி கூறுகிறார். அவர் பார்வையில் நாமும் இளைஞர்களை நேர்மறையோடு அணுகிட இளையோர் தங்கள் கடமைகள் என்னவென்பதை உணர்ந்து செயல்பட, இளைஞர்களின் அருள்வாழ்வை புடமிட புதிதாய் மலர்ந்திருக்கிறது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “கிறிஸ்து வாழ்கிறார்” எனும் திருத்தூது அறிவுரை ஏடு.

இளையோர் கரிசனையில் உலக ஆயர் மாமன்றம்

வழக்கமான பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்டு இளையோர் மீது தனிக்கரிசனை கொண்ட நம் திருத்தந்தை இளைஞர்களைப் பற்றி சிந்திப்பதற்காக கடந்த 2016 அக்டோபர் 6 ஆம் நாள் உலக ஆயர் மாமன்றத்திற்கான அறிவிப்புதனை வெளியிட்டார். 2017 சனவரி 13 மாமன்றத்திற்கான தயாரிப்பு ஏடு வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2017 செப்டம்பர் 11 முதல் 15 வரை சிறப்பு உலக கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் 2017 மே 8 ஆம் நாள் ஏட்டின் இறுதி வரைவு தயாரிக்கப்பட்டது. அதன்பின் மார்;ச் 19 முதல் 24 வரை இளையோர் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் அகில உலகின் சார்பாக மொத்தம் 44 இளைஞர்கள் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இது தனிச்சிறப்பே. இந்தியாவிலிருந்து மூன்று கத்தோலிக்கர், ஒரு சீக்கியர் மற்றும் ஒரு இஸ்லாமியர் என ஐந்து இளைஞர்கள் பங்கெடுத்தார்கள். ‘இளையோரே இளைஞர் பணியின் தூதுவர்கள்’ என்று மடலில் திருத்தந்தை குறிப்பிடுவதற்கு இளைஞர்களின் பங்கேற்பே நற்சான்று.

‘இளையோர் - நம்பிக்கை, அழைத்தல், தேர்ந்து தெளிதல்’ என்கிற மையக்கருவில் சிறப்பு உலக ஆயர் மாமன்றத்தைக் கூட்டுகையில் நம் திருத்தந்தை “இளையோரே, நீங்கள் புதிய சமுதாயத்தை கனவு காண்கிறவர்கள் திருச்சபைக்கு நீங்கள் தேவை, முக்கியமானவர்கள் நீங்கள் திருஅவைவின் நம்பிக்கை உங்கள் வழியாக எளிதாக நற்செய்தியை அறிவிக்க முடியும் உங்களால் வேகமாக மாற்றங்களை கொண்டு வரமுடியும்” என்றார். இதுதான் உண்மை. மாற்றத்தின் நாற்றங்கால்கள் நம் இளைய சமூகம்.

எதற்காக இந்த மாமன்றம்? என்கிற கேள்விக்கு பதில் மாமன்றத்தின் இயல்பில்(யேவரசந) இயம்பப்பட்டுள்ளது. அதாவது 1) இளையோரின் உலகிற்குள் நுழைவது 2) இளையோரின் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கச் செய்வது 3) இளையோரோடு இணைந்து இருப்பது 4) இளையோரின் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பது. ஒட்டுமொத்தத்தில் ‘எல்லோரும் மகிழ்ச்சியாக மாண்போடு வாழும் புதிய உலகை உருவாக்குவது’ உலக ஆயர் மாமன்றம் நோக்கமாகும்.

‘கிறிஸ்து வாழ்கிறார்’ - மடல்

இத்திருத்தூது அறிவுரை மடலானது பத்து தலைப்புகளில் 299 பத்திகளை உள்ளடக்கியுள்ளது. ஓவ்வொரு தலைப்பும் இறையியல் மற்றும் வாழ்வியல் கூறுகளை விவிலியத்தின் அடிப்படையில் மையங்கொண்டுள்ளது.

முதல் தலைப்பு ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்கிற மறையுண்மையை நமக்கு விலாவாரியாக சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்துவே நம் நம்பிக்கை. வியப்பான முறையில் அவர் இளமையை நம் உலகுக்குக் கொணர்கிறார். அவர் தொடுகின்ற ஒவ்வொன்றும் இளமையாக புதியதாக முழுமையான வாழ்வாக மாறுகின்றன. கிறிஸ்து வாழ்கிறார்! மற்றும் நீங்கள் உயிர்த்துடிப்புடன் வாழ வேண்டுமென ஒவ்வோர் இளம் கிறிஸ்தவர்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன் என்கிறார் திருத்தந்தை. அவர் உங்களில் இருக்கின்றார். அவர் உங்களோடு இருக்கின்றார் மற்றும் அவர் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார். நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் உயிர்த்தெழுந்த கிறிஸ்து எப்போதும் அங்கே இருக்கின்றார். அவர் உங்களை அழைக்கின்றார். தம்மிடம் திரும்பிவந்து வாழ்வை மீண்டும் தொடங்க வேண்டுமென அவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார். துயரத்தால் சினத்தால் அச்சத்தால் சந்தேகத்தால் அல்லது தோல்வியால் நீங்கள் வயது முதிர்ந்ததைப் போல உணரும்போது உங்கள் வலிமையையும் உங்கள் நம்பிக்கையையும் நிலைநிறுத்த அவர் எப்போதும் உங்களோடு அங்கே இருக்கின்றார் (ஊhசளைவரள ஏiஎவைஇ 1-4) என்கிற நம்பிக்கையை விதைக்கிறது மடலின் முதற்பகுதி.

இரண்டாவது தலைப்பின் கீழ் கடவுளின் வார்த்தை இளைஞர்களுக்கு என்ன சொல்கிறது (எண் 5) என்கிற செய்தியும் பழைய ஏற்பாட்டு காலத்து இளையோர் (6-11) புதிய ஏற்பாட்டு காலத்து இளையோர் (12-21) பற்றிய பல தரவுகளும்; விளக்கப்பட்டுள்ளன. மக்கள் நலனுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் துடிப்போடு செயல்படும் இளமைப்பருவத்தை சரியாக பயன்படுத்துவதற்கான அழைப்பாகவே இப்பகுதி விளக்கப்பட்டுள்ளது. யோசேப்பு சாமுவேல் தாவீது ஏரேமியா போன்றவர்களின் வாழ்வு உதாரணமாக தரப்பட்டுள்ளது.

மூன்றாவது தலைப்பில் இயேசு என்றும் இளமையானவர் (22) இயேசுவின் இளமைப் பருவம் (23-29) இயேசுவின் இளமைப் பருவம் நமக்கு கற்பிப்பது (30-33) திருஅவையில் இளமை (34) திறந்த மனதோடு புதுப்பித்தலுக்கு தயார் நிலையிலுள்ள திருஅவை (35-38)காலத்தின் அறிகுறிகளுக்கு செவிமடுக்கும் திருஅவை (39-42) நாசரேத்து இளம் மங்கை மரியா (43-48) இளம் வயது புனிதர்கள் (29-63) போன்ற தலைப்புகளின் கீழ் நற்சிந்தனைகள் பல தரப்பட்டுள்ளன. இயேசு என்றும் இளமையானவர், குடும்பத்தோடும் சமூகத்தோடும் முழு தொடர்பிலும் உறவிலும் நிலைத்திருந்தவர். அவர் தனது அனுபவத்திலிருந்து தன் இளமைத் துடிப்பையும், கனவுதனையும் இளையோரோடு பகிர்;ந்து கொள்கிறார்.

நான்காவது தலைப்பு, இளையோர் கடவுளின் நிகழ்காலம் (64) என்கிறது. எனவே இளைஞர்களை திருஅவையின், சமூகத்தின் எதிர்காலம் என சுருக்கி விட முடியாது, கூடாது என எச்சரிக்கிறது. இளைஞர்கள் நிகழ்காலத்தில் நேர்மறை எண்ணங்களில் (65-67) துலங்குவதற்கான வழிகளை எடுத்தியம்புகிறது. இளமையோடு இருக்க பல வழிகள் (68-70) விளக்கப்பட்டுள்ளன. இளையோரின் சில அனுபவங்கள் (71-85) பகிரப்பட்டுள்ளன. போர்கள், சுரண்டல், கடத்தப்படுதல் திட்டமிட்ட குற்றச் செயல்கள், மனித வியாபாரம், அடிமைத்தனங்கள், பாலியல் சுரண்டல், வன்முறை, பயங்கரவாதம் என குழப்பம் நிறை உலகில் வாழ்கிறோம் (72-80) என்கிற அச்சுறுத்தல்கள்; சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பழமைவாதம், பிளவுபடுத்தும் கருத்தியல்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளின் கைப்பாவைகளாகச் செயல்படும் இளையோர் போதை, சூதாட்டம், நீலப்படம், தவறான உறவு முறையில் கருத்தரிப்பு கருச்சிதைப்பு போன்ற இன்றைய இளைய சமூகத்தின் சவால்கள் இனம் காணப்பட்டுள்ளன. இளைஞர்களின் ஆசைகள் வெறுப்புகள் மற்றும் ஏக்கங்கள் (81-85) வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகச் சூழமைவால் (86-90) ஏற்படும் தனிமைப்படுத்துதல் சுரண்டப்படுதல் வன்முறைக்கு உள்ளாக்குதல் இடம் பெயர்தல் பற்றியும் ஏடு பேசுகிறது எல்லாவிதமான சீண்டல்களையும் முடிவுக்கு கொண்டு வருதல் (91-110) பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தாவது தலைப்பு எல்லா இளையோருக்கும் சிறப்பான செய்தியொன்றை (111) எடுத்துரைக்கிறது. அதில் அன்பு செய்யும் கடவுள் (112-117) பற்றியும் கிறிஸ்து நம்மை மீட்பது (118-123) பற்றியும் கிறிஸ்து வாழ்கிறார் (124-129) அவரோடு தூய ஆவியின் இயக்கமும் (130-133) இணைந்து நம்மை வழிநடத்துகிறது என்கிற அருள்வாழ்வின் உண்மைதனை இளைஞர்களுக்கு உரக்கச் சொல்கிறது. ஆறாவது தலைப்பு இளையோரின் பாதைகள் (134-135) கனவுகள் மற்றும் முடிவுகள் (136-143) சமூகப் பணிகள் வாழ்வதற்கும், அனுபவம் பெறுவதற்குமான தாகம் (144-149) கிறிஸ்துவோடு நட்புறவு (150-157) முதிர்ச்சியும் வளர்ச்சியும் (158-162) சகோதரத்துவ மனநிலை(163-167) துணிச்சல்மிகு ஆற்றல்மிகு பணியாளர்கள் (175-178) உண்மைக்கு சான்று பகர்தல் வாழ்வில் எதிர்நீச்சல் போன்றவைப் பற்றி எடுத்துரைக்கிறது.

ஏழாவது தலைப்பு தங்களது வேர்களுடன் இளையோர் (179) இணைந்திருக்க அழைப்பு விடுக்கிறது. வேர்களிலிருந்து பிடுங்கி எறியப்பட அனுமதிக்காதீர்கள் (180-186) என்கிறது. இளையோர் முதியவர்களோடு கொண்டுள்ள உறவுநிலை (187-197) நல்வாழ்விற்கான படிக்கல் என பறைசாற்றுகிறது. அனைத்திற்கும் மேலாய் சவால்களை துணிவோடு சந்திப்பது (198-201) தேவை என்கிறது. எட்டாவது தலைப்பின் கீழ் இளையோர் பணிகள் (202) மேய்ப்புப்பணி கரிசனை (203-208) செயல்பாட்டிற்கான முக்கிய தளங்கள் (209-215) தகுந்த சூழமைப்பு (216-220) கல்வி நிறுவனங்களில் இளையோர் பணிகள் (221-223) வளர்ச்சிப் பாதைக்கான பகுதிகள் (224-229) ஒரு ‘பிரபலமான’ இளைஞர் பணி (230-238) எப்பொழுதும் துறவிகளாய் (239-241) இளைஞர்களோடு கரம் கோர்த்தல் (241-247) பற்றிய சிந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒன்பதாவது தலைப்பு அழைத்தல் (248-249) பற்றி எடுத்துரைக்கிறது. நட்பிற்கான இறைவனின் அழைப்பு (250-252) மற்றவர்களுக்காக வாழ அழைப்பு (253-258)அன்பு மற்றும் குடும்பம் (259-267) வேலை (268-273) துறவு வாழ்வுக்கான அழைப்பு (274-277) போன்ற தலைப்புகளில் வாழ்வுக்கான அழைப்பு நட்புக்கான அழைப்பு புனிதத்துவத்திற்கான அழைப்பு மையப்படுத்தப்பட்டுள்ளது. அன்பு செய்யவும் குடும்பத்தை கட்டியெழுப்பவும் குடும்பத்திற்கான அழைப்பு தரப்படுகிறது. பிறருக்காக வாழ நட்பு அழைப்பு விடுக்கிறது.

பத்தாவது பிரிவு தேர்ந்து தெளிதல் (278-282) பற்றி எடுத்துரைக்கிறது. நமது தேர்ந்து தெளிதலில் கடவுளின் திட்டமும் வாழ்வின் அர்த்தமும் அடங்கியுள்ளது. அழைத்தலை தேர்ந்து தெளிதல் (283-286) அவசியம். கடவுளின் திட்டப்படி அடுத்தவர் நலனுக்கான நமது அழைத்தல் அமைய வேண்டும். நம் நண்பரான இயேசுவின் அழைப்பு (287-290) நமக்கு முன்மாதிரி. செவிமடுத்தல் மற்றும் உடன் பயணித்தல் (191-298) இன்றைய காலச்சூழலில் மிகமிக அவசியம். இறுதியாக முடிவுரையோடு (299) திருத்தந்தையின் அறிவுரை மடல் நிறைவு பெற்றுள்ளது.

இளையோரே திருஅவைக்கு நீங்கள் தேவை!

அசிசி நகர் புனித பிரான்சிஸ் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு நினைவுகூர்வோம். சிலுவையின் முன் நின்ற பிரான்சிஸ் இயேசுவின் குரலைக் கேட்டார். “பிரான்சிஸ் என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவாய்”. இளையவரான பிரான்சிஸ் அக்கட்டளையை உடனடியாகத் தாராள மனத்தோடு ஏற்றார். எந்த இல்லத்தைக் கட்டியெழுப்புவது என்றக் கேள்வி எழுந்தது. கற்களால் ஆன ஒரு கட்டிடத்தை அல்ல மாறாக திருஅவையின் வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதைப் பிரான்சிஸ் உணர்ந்தார். கிறிஸ்துவின் முகம் திருஅவையிடம் இன்னும் தெளிவாக ஒளிரும்படி செய்வதே அப்பணி என்பதை அவர் உணர்ந்தார்.

இன்றும் இளையோரே நம் திருத்தந்தை பிரான்சிஸ் சொல்வதுபோன்று திருஅவைக்கு நீங்கள் தேவை. இன்றும் கிறிஸ்து உங்களை அழைக்கிறார். தன்னைப் பின்தொடர திருஅவையின் பணியாளராக மாற உங்களை நீங்கள் அறிந்து கொள்ள சமூகத்தின் அழுக்குகளை அகற்றிட… இது எவ்வகையில் சாத்தியம்? நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கிறிஸ்துவின் சீடராக மறைப்பணியாளராக வாழ்வது எப்படி? வரும் நாட்களில் தொடர்ந்து சிந்தித்து செயல்பாட்டிற்கான காரியங்களை திருத்தூது அறிவுரை மடலின் அடிப்படையில் முன்னெடுப்போம்.